
அலாரத்தை வைக்கும்போதே
திங்கட்கிழமையின் காலடியோசைக்
கேட்டுவிடுகிறது.
அதிகாலை ரயிலில்
ஏறும்போதே
எல்லோரும்
ஏதோ ஒன்றை
வீட்டிலேயே விட்டுவந்தவர்களைப்போல
அமைதியாகக் குனிந்தபடி
தங்களுடைய வாழ்க்கையைக்
கைப்பேசித் திரையில்
தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
காபிக்கடைகளில்
கோப்பைகள் சூடாக இருக்கின்றன.
அவற்றைப் பிடித்திருக்கும் கைகளில்
ஞாயிற்றுக்கிழமையின் குளிர்
இன்னும் மிச்சமிருக்கிறது.
திங்கட்கிழமைகளில் நகரம்
ஒரு பெரிய கடிகாரமாகிவிடுகிறது.
மாலை வரைக்கும்
எப்படியாவது சமாளித்துவிடென
ஒவ்வொரு நிலையமும்
ஒரு முள்ளாகி
யாரோ ஒருவரின்
நேரத்தைக்
கச்சிதமாக நகர்த்திக்கொண்டிருக்கிறது.
இந்தத்
திங்கட்கிழமையை
மிகவும் வெறுப்பவர்கள்
யாராவது இருந்தால்
சொல்லுங்கள்.
என்னிடம்
நேற்றைய ஞாயிற்றுக்கிழமையின்
கொஞ்சம் சோம்பலும்,
குடிக்காமல் விட்ட
அரைக் கோப்பைத் தேநீரும்,
முடிந்துபோக மறுக்கும்
சில உரையாடல்களும்,
நிறைவேறக் காத்திருக்கும்
சில கனவுகளும் இருக்கின்றன.
ஒவ்வொரு திங்கட்கிழமையின்
கைப்பையிலும்
இன்னும் தூங்கிக்கொண்டிருக்கும்
ஒரு சிறிய ஞாயிற்றுக்கிழமையை
ஒளித்து வைத்திருக்கிறேன்.
-இன்பா

