நாரணோ ஜெயராமன் கவிதைகள்
நாரண ஜெயராமன் தனது அனுபவத்தின் உள்ளுணர்வினை மனத்துள் நிரப்பிக்கொண்டு சுயத்தைக் கண்டறியும் ஆவலோடு புது உக்கிரம் பெற்ற கவிதைகளைப் படைத்துள்ளார். அன்றாட வாழ்வியல் குறித்து தனது பார்வையை எளிமையான வரிகளில் சொல்லப்பட்டிருந்தாலும் அதனுடைய பொருள் திண்மையாக இருக்கிறது. மென்மையான உணர்வுகள் ஆதங்கமாக இயல்பாக அவரது கவிதைகளில் வெளிப்படுகிறது. சமீபத்தில் காலமான நாரணோ ஜெயராமன் அவர்களுடைய ஒரு சில கவிதைகள்
1. அநாதார ஜீவி
என் முதுகின் பின்னால்
மின்விசிறி இரைகிறது
இரைச்சல்
தாளவில்லை என்பதால்
அதை நான் நிறுத்த முடியாது
கொசுக்களால் கடிக்கப்படுவேன்
படுக்கை வலிப்பதேன்?
யோசனை முட்களா?
கையில் வீணை கொடுத்து அனுப்பியவனும்
மோசம் செய்துவிட்டான்
நாதத்தைக் கேட்க நாதியில்லை
கிரேன்கள்
கொக்கி போட்டு குரல்வளையை நெரிக்கின்றன
மீண்டும் மீண்டும்
பொம்மலாட்ட சூத்திர தாரியிடம்
நம்பிக்கைப் பாத்திரத்தைப் புதுப்பித்துக்
கண்ணயர்வது தவிர
வேறென்ன செய்ய?
2. பக்கத்தைப் புரட்டு
சூரியன் காய்கையில்
ஈடுகொடுத்துப் பொசுங்கும் நீங்கள்
அவன் உறங்கியதும்
மெல்லத் தப்பித்து வருவதில்லை
அவனுடன் சேர்ந்து உறங்கிவிடுகிறீர்கள்
நிலவின் குளிர்ச்சி பற்றி உங்களுக்கென்ன
தெரியும்?
3. உயிர்
சுற்றிலும்
இல்லாமை பிரலாபம்
ஓட்டைக் கதவுக்குக் கனத்த பூட்டுகள்
சாக்கடையோரத்தில்
கந்தலில்
சிசுக்கள் நிலா கண்டு சிரித்து
மல்லாந்து கிடக்கும்!
4. சுயம்
சும்மா கிடந்தது காலண்டர் தாள்!
மடித்து, துண்டு வெட்டி,
குவித்து, விரித்து
கப்பலாக்கி
ஜன்னல் கட்டையில் வைத்தேன்
அசைந்த காற்றில் தடுமாறியது
காகிதக் கப்பல்!
புயல்!
5. கடியார பிரக்ஞை
வயோதிகத்தில்
மூதாட்டிக்கு,
மணிக்கொருமுறை சிறுநீர்,
ஒவ்வொருமுறையும்
‘பெட்பேன்’ வைத்து அகற்றுகையில்,
மணி என்னவென முனகுகிறாள்
அவஸ்தை நீள
காலம் நீர்க்காமல்!
6. அலங்கோலம்தான்
அழகு,
விந்தைதான்!
கவரப்படு,
இயல்புதான்!
அது,
உன்னுள் வாழ்வு இனிக்க,
கவித்துவ மொழியாகட்டும்!
ரீங்கார இசையாகட்டும்!
ஆக்கிரமித்துப் பற்றாதே,
அலங்கோலம்தான்!
7. எடையற்று
என்னவென்று சொல்ல?
ஏதென்று சொல்ல?
இறகுகள் உதிர்கின்றன
சிலிர்க்கும் காற்றில்
மிதக்கும் பஞ்சுத்துகள்!
8. காட்சிப் பரிமாணம்
அந்தி வானில்
வண்ணப் பொலிவுடன் மேகத்திரட்டுகள்!
செம்பிழம்புச் சூரியன்
முதலை வாயில்!
9. அமிழல்
ஆடாத கிளைமேல்
கரையாமல், சிறகு பரத்தி,
தலை தாழ்த்தி, நீட்டிய அலகால்
இடம், வலமெனச் சொறிந்து நின்றது காகம்
இருகூறு என இருபக்கம் பிரிந்த
இறகுகள் தொய்ந்து விழும்நிலை பெற்றன
அகம் பார்க்கும் நிலை இதுவெனத் தெளிவு.
10.
உனக்குள் தடுமாறு
பற்றிக்கொள்
குட்டிக்கரணம் போடு
வௌவாலாய்த் தொங்கு
வெளியில் செங்கல் அடுக்கி
மணல்கலந்து காரை பூசி
கட்டிடம் எழுப்பாதே
ஜந்துக்கல் அடையும்
நாறும்