யான் காப்லின்ஸ்கி கவிதைகள்
தமிழில்: வே.நி.சூர்யா
இன்றைய காலை குளிர்ச்சியுடன் இருந்தது,
ஆனால் மத்தியானத்திற்குள் வெப்பம் கூடிவிட்டது.
நீல முகில்கள் வடக்கில் குவிந்திருந்தன.
நான் செவ்வியல் மொழிகளைக் கற்பிப்பது குறித்து விவாதம் நிகழ்ந்த
ஒரு சந்திப்பிலிருந்து வந்தேன்.
தனது பிரச்சனைகளை என்னிடம் சொல்ல விரும்பிய நண்பருடன்
நான் ஆற்றின் அருகே அமர்ந்திருந்தேன்.
தண்ணீர் நிறைய ஓடிக்கொண்டிருந்தது.
இரண்டு சிறுவர்கள்
கரையிலிருந்து கூழாங்கற்களை ஆற்றில் வீசிக்கொண்டிருந்தனர்.
அவருக்குப் பகிர்வதற்கு என்னிடம் எந்த ஆலோசனையும் இல்லை…
மேலும் நதிக்கரையில் பெஞ்சுகளும் இல்லை—
அநேகமாக இரவுநேர போக்கிரிகள்
அவற்றை மறுபடியும் தண்ணீரில் எறிந்திருக்கலாம்.
சூரியன் ஒரு மேகத்தின் பின்னால் மறைந்தான்.
நாங்கள் உறைந்து கொண்டிருந்தோம்.
பின் நாங்கள் எழுந்து மீண்டும் ஊருக்குச் சென்றோம்.
ஒருவேளை அவர் தன் பாதையைக் கண்டுபிடித்திருக்கக்கூடும்.
ஓட்ஸிற்காகவும் ரொட்டிக்காகவும் கடையொன்றில் நான் நின்றேன்.
இது ஜூன் மாதம்.
வீட்டிற்குச் செல்லும்போது பார்த்தேன்
மூன்று இளம் போராளிகள் தங்களது
ரூபிக் கனசதுரத்தை திருகிக்கொண்டிருந்தார்கள்.
– யான் காப்லின்ஸ்கி ( 1941- 2021)
எஸ்டோனியாவின் டார்த்து பகுதியில் பிறந்தவர். அவருடைய தாயார் எஸ்டோனியாவை சேர்ந்தவர். தந்தை போலாந்து நாட்டுக்காரர். அடிப்படையில் காப்லின்ஸ்கியின் ஆளுமை பலகுரல் தன்மை கொண்டது. கவிஞர், தத்துவவாதி , சூழலியலாளர், மஹாயான புத்தத்தின் மாணவர், கலாச்சார விமர்சகர். காப்லின்ஸ்கியின் கவிதைகள் சலிப்பின்றி மையம் கொள்வது இயற்கையிலும் இயற்கையில் சுயம் அடையும் இடம் குறித்த தியானத்திலுமே. தாவோ தே ஜிங்யையும் சீன செவ்வியல் கவிதைகளையும் மொழியாக்கம் செய்துள்ளார். The Wandering Border, Evening brings everything back போன்ற கவிதை தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன.